கிளிநொச்சியின் விழுகை ஏன் நெஞ்சைப் பிழிகிறது ?
நம் எதிரி கிளிநொச்சி மீண்டான் என்ற செய்தி வலிக்கிறது. எனினும் கிளிநொச்சியின் விழுகை எமது எழுச்சிக்கு உத்வேகம் அளிப்பாதாய் அமைகிறது. மேற்படி கூற்றுக்கள் இரண்டும் ஒன்றோடொன்று முரண்படுவது போல்த் தோன்றினும் இங்கு முரண்பாடு ஏதுமில்லை.
முதலில் கிளிநொச்சியின் விழுகை ஏன் நெஞ்சைப் பிழிகிறது என்று பார்த்தால், இக்கேள்வி பிறந்த கணத்திலேயே நம் மனக்கண்களில் விரிவோர் சென்ற தடவை கிளிநொச்சி மீட்பிற்காய் உயிர் நீத்தவர்கள் : மக்களும் மாவீரரும். ஒரு காலத்தில் ஒவ்வொரு மாவீரனது பெயரும் முகமும் தமிழ் மக்களிற்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. இன்று எண்ணிக்கை இருபதினாயிரத்தைக் கடந்து போராட்டத்தின் வீச்சு அபரிமிதமாய் பரந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு தமிழரிற்கும் சில பத்து மாவீரர்களின் முகங்களே ஞாபத்தில் நிற்க, மற்றையோர் “மாவீரர்” என்ற குறியீடால் பொதுப்பட உணரப்படும் துர்ப்பாக்கியம் எமக்கின்று. மக்களது இழப்புக்களும் அவதிகளும் கூட இது போன்றவை தான். இன்று எதிரி கிளிநொச்சி மீண்டான் என்பதை மனமுணருகையில், நாம் கொடுத்த முந்தைய விலைகளும் அவற்றின் வலியும் அதிகப் பட்டு வலிக்கின்றன. மிதிவெடிகளில் காலிழந்த உறவுகள் நம் கண்களில் விரிகின்றார்கள். எதிரியின் ராங்கிக்குள் கைவசமிருந்த கடைசிக் குண்டோடு பாய்ந்து வெடித்துச் சென்றமுறை கிளிநொச்சி மீட்ட போராளியின் ஞாபகம் நெஞ்சைப் பிழிகிறது.
எவ்வூரில் பிறந்து எப்படி வளர்ந்திருப்பினும், புலம் பெயர்ந்த தமிழர்களில் சமாதான காலத்தில் தாயகம் சென்றவர்களில் கிளிநொச்சி செல்லாது வந்தவர்கள் மிகக் குறைவு. கிளிநொச்சி எமது ஒட்டுமொத்த அபிலாசைகளின் பிரதிபலிப்பாக, எமது உள்ளுணர்வுகளின் குறியீடாக, எமது நம்பிக்கையாக, எமது ஆளுமையின் வெளிப்பாடாக, எம்மனங்களில் ஒட்டிக்கொண்டது. கிளிநொச்சியில் இருந்த எமது கட்டிடங்களில் ஒட்டிக்கொண்டிருந்த எமது நிறுவனப் பெயர்கள், எமது கட்டுமானப் பெயர்கள், முதலியன எல்லாம் எதிரியின் கிளிநொச்சி ஆக்கிரமிப்பின் பின்னர் காலாவதியாகிவிட்ட பெயர்கள் என்று புரிகையில், அக்கட்டிடங்களின் சீமெந்தும், தீராந்தியும், உழைப்பும், வியர்வையும் எமது மனங்களில் மிஞ்சுகின்றன. எதிரி இக்கட்டடங்களைப் புரட்டிப் போடுவதற்கான சாத்தியக்கூறு நிறையவே இருக்கின்றது. அவ்வகையில் கடந்த தசாப்தகாலமாக நாம் ஒருசேர உழைத்த உழைப்புக் கரியாகும் கவலை நெஞ்சைப் பிழிகிறது. திரிபுரமாகும் நந்தவனம் நெஞ்சைப் பிழிகிறது.
மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழீழம் முழுவதும் பரந்து இருப்பினும், நெடுங்கால புலப்பெயர்வு வாழ்வின் பின்பு நெஞ்சு நிறைந்த ஆசையோடு தாயின் வாஞ்சைவேண்டி தாயகத்திற்கு ஓடியவர்கள் அநேகமாய்ச் சென்ற துயிலும் இல்லங்களில் கிளிநொச்சி துயிலும் இல்லம் முக்கியமானது. உலகில் எவ்விடமும் தாராத அமைதியை, நம்பிக்கையை, ஆளுமையை, புவியீர்பின் பிடிக்குள்ளும் உடல் நிறையிழந்த மாயத்தை, தொப்புள்கொடி என்ற சங்கதியின் ஆழத்தைக், கண்ணீரின் பலத்தை, நரம்புகளின் தொழிற்பாட்டை, தம் உடலெங்கும் இருந்த மயிர்த்துளைகளை உடலும் உளமும் ஒருசேர உணர்ந்து ஒன்றித்து நின்ற கணங்களை உணர்ந்தவர் மறவார். எதிரியின் காலணிகள் துயிலும் இல்லமும் செல்லும் என்ற நினைப்பு நெஞ்சைப் பிழிகிறது.
பாண்டியனும் சேரனும் எது தந்தாலும் எமக்குச் சுவைத்தது. உலகின் நட்சத்திர விடுதிகளில் சீமாட்டிகளோடும் சீமான்களோடும் உண்ட உணவெல்லாம் எத்தனை சாதாரணம் என்று தோன்றுகின்றது. பாண்டியனில் உணவு பரிமாறும் பையனில் விளங்கப்படுத்தமுடியாச் சகோதர பாசம் பிறக்கிறது. போராட்டத்தின் பரிமாணங்கள் புரிகிறது. வாணிபத்தை நம்மால் வாணிபமாய்ப் பார்க்க முடியவில்லை. அம்மம்மா ஊட்டிய நிலாச்சோறு தான் அவையும் என்று எம்மனங்களில் நாம் பாண்டியனிலும் சேரனிலும் உண்ட உணவுகள் ஆகின்றன. எமது நடையும் தலையும் பெருமை நிறைந்து நிமிர்கின்றன. அடிக்கடி போகின்றோம்… கதைகேட்டுக் கதைகேட்டு அகமகிழ்ந்து உண்கின்றோம்… இன்றங்கு எதிரியின் பிரசன்னம் நெஞ்சைப் பிழிகிறது.
“ரச் அடிப்பதற்காய்” குப்புறப்படுத்தபோது நாசியில் ஒட்டிக்கொண்ட மண்ணின் வாசனை... அந்நிலத்தில் மீண்டும் சிங்களக் காலணிகள்…நெஞ்சைப் பிழிகிறது.
ஆனால், கிளிநொச்சியின் வீழ்கை நாம் தளர்ந்து போவதற்கான எந்தக் காரணத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக எழுந்து நிற்பதற்கான புதிய உத்வேகத்தைத் தான் தருகின்றது.
எப்படியென்று கூறு முன்னார், புலத்துக்கு ஒரு நிமிடம் மீளுவோம். ஞாயிற்றுக் கிழமை நன்றாகத் தூங்குவோம் என நினைத்து, சனி இரவு ஞாயிறு அதிகாலை ஆகும் வரை மகிழ்திருந்து படுக்கைக்குச் சென்ற நாம், ஞாயிறு காலை பத்து மணிக்கு ஆரேனும் தொலைபேசியில் அழைத்தாலோ, கையில் பைபிளோடு மதவியாபாரி கதவில் தட்டினாலோ எத்தனை ஆத்திரம் கொள்கிறோம். நமது “பிரத்தியேக வெளி” அத்துமீறப்பட்டதாக நமது அகம் காட்டுக் கத்தல் கத்துகிறது. வீடுகள் மட்டும் உள்ள சுற்றாடலில் உள்ள சிறுதெருவில் தன் மகவோடு மாலைநேரம் நடக்கும் தந்தை, எப்போதேனும் எவரேனும் அச்சிறு தெருவில் வேகக்கட்;டுப்பாடு இன்றி வாகனம் ஓட்டிச் செல்லின் கொதித்துப் போகின்றார். ஒத்துக் கொண்ட கட்டமைப்பை அச்சாரதி மீறி விட்டான் என வெகுண்டு போகின்றார். உலகின் பணக்கார நாடுகளில் தமது சேமிப்பைப் பெருக்குவதற்காக முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இன்று தமது சேமிப்பு மறைந்தமை குறித்துக் கத்தாத வசவுகள் இல்லை. பெருந்தெருவில் வாகனம் ஓட்டுகையில் ஆரேனும் இடக்கு முடக்காக நமக்கு முன்னால் உள்நுழைந்தால் வானகத்தின் ஹோர்ண் பிய்ந்துபோகும் வண்ணம் அழுத்தி விரல் காட்டி எத்தனை கத்தல்கள் தினமும் நிகழ்கின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்;ட சமூக ஒப்பந்தத்தை இடக்கு முடக்காய் உள்நுழைந்த சாரதி மீறி விட்டான் என்ற கடுப்பு கத்தல்களிற்குக் காரணமாகிறது.
இப்போது தாயகம் மீழ்வோம். கேட்டுக் கேள்வியின்றி எம்நிலத்தில் இருந்து நாம் வெளியேற்றப் பட்டுச் சிங்களவர் குடியேற்றப்படுகின்றார்கள். எம்மிடம் காணி-உறுதி உள்ளதே என்று சொல்லிப் பாத்தோம் சிரிக்கின்றாhகள், பின் நம் பிடரியில் நம் காணி-உறுதியால் தட்டுகின்றார்கள். மேற்கில் நெடுந்தெருவில் நாம் பயணிக்கும் சொற்பநேரம் மட்டும் நமதாக இருக்கும் எமது “பிரத்தியேக வெளிக்குள்” இடக்கு முடக்காகப் பிறிதொரு சாரதி புகுந்ததாய் ஆர்பாட்டம் செய்வது நியாயமாகப் படுகையில் நமது காணி உறுதியே நமது பிடரியில் அடிப்பது எத்தனை அபாண்டம்? ஞாயிறு காலை தொலைபேசி அழைப்போ கதவு மணி ஒலிப்போ அபாண்டம் என்கையில் நினைத்தநேரம் வீடுகளின் மீதும் கிராமங்களின் மீதும் குண்டு போடுதல் எத்தனை அபாண்டம்? முதலிட்ட சேமிப்பு நம் பேராசையால் கரைந்தததற்கு வரிப்பணத்தில் இருந்து—அதாவது முதலீடே செய்ய வக்கற்றவனும் கட்டியே தீரவேண்டிய வரிப்பணத்தில் இருந்து—அரசு நட்ட ஈடு தருவது அவசியம் என்ற கத்தல் நியாயமானது என்றால், காலாதிகாலமாக நாம் சேமித்த எமது சேமிப்புக்களான எமது நிலங்களும் வயல்களும் நமது பேராசையோ முறைகேடோ காரணமின்றி சிங்கள இனவெறியால் பறிமுதல் செய்யப்படுவது எத்தனை அபத்தம்? ஆனால் இவை பற்றி எல்லாம் நாம் கடிதம் எழுதின் யாரும் கேட்பதாய் இல்லை. உலகின் அனைத்து அசைவுகளும் சுயநலன் சார்ந்து மட்டுமே நடக்கின்றன என்;ற அடிப்படையில் நமது கடிதங்கள் குப்பைத்தொட்டிகளில் வாசிக்கப்படாத கன்னிகளாகக் கடாசப்படுகின்றன.
உலகில் அனைத்துமே நலன்சார்ந்த போட்டிகளாக மட்டும் இருக்கையில், நமது நலன்களிற்காக நாம் மட்டுமே முனைய முடியும்.
கொழும்பில் நேற்று வெடித்த பட்டாசுகளும், சேரிச் சிங்களத்தில் மகிந்தனிற்குக் கிடைத்த பாராட்டுக்களும், கோத்தபாயாவும் பொன்சேக்காவும் மேசையில் அமர்ந்திருந்த தோரணையும், கிளிநொச்சியின் வீழ்ச்சியில் உலகநாடுகளின் பங்கும் மீண்டும் ஒரு முறை நலன்சார் இயங்கியலை எமக்கு ஞாபகப் படுத்தியுள்ளன. தனிநபர்களாகத் தமிழர்கள் எங்களிற்குள் நலன்கள் வேறுபடுகின்றன என்றபோதும் தமிழீழம் என்பது எங்கள் அனைவரதும் ஒருங்கிணைந்த நலனாக விளங்குகின்றது. தமிழனின் பிரத்தியேக நலன்கள் கட்டியமைக்கப்படுவதற்குத் தமிழீழம் என்ற அத்திவாரம் இன்றியமையாததாகின்றது--எமது காணி-உறுதியே சிரிப்பிற்குரியது என்றாகையில் காணிக்குள் பயிர் போடும் கனவு சாத்தியமற்றது. கொழும்பில் நேற்று வெடித்த பட்டாசுகள், நாம் நமது போராட்டத்தைக் கைவிடின் எமது காணி உறுதிகள் தொடர்ந்தும் எமது பிடரிகளில் தட்டும் என்ற உண்மையைத் தான் மீண்டும் ஒரு முறை சொல்லி நிற்கின்றன.
நாம் நொந்து வருந்தி உழைத்து மீட்ட கிளிநொச்சியோ, அல்லது வேறு எந்தப் பிரதேசமோ எமது கைவிட்டுப் போகின்றது என்றால், அவ்விழப்பு எமக்குக் கூறக்கூடிய ஒரே செய்தி, இன்றைய நாளில், இவ்வுலகின் போட்டியில், இம்முனையில் நாம் தோற்றுப் போனோம் என்பது மட்டுமே. ஆனால் நாம் வாழப்போகின்றோம் என்பதை நாம் முடிவு செய்துவிட்ட நிலையில், எவ்வாறு இப்போட்டியை வெல்வது அதற்காக எப்புதிய வெளிகளையும் வழிகளையும் நாம் ஆராய்வது என்பன மட்டும் தான் எமது சிந்தனையை நிரப்பலாமே தவிர தளர்வு என்பது வாழ முடிவெடுத்தவனிற்கு இருக்கமுடியாதது. போட்டி மிக்க இயங்கியலில் தளர்வின் மறுபெயர் சாவு.
கிளிநொக்சி விழுகையானது எவ்வித புதிய செய்திகளையும் கூறாது பழைய ஆபத்துக்களை மட்டும் பலத்து மீண்டுமொருமுறை சொல்லியுள்ளது. காலவோட்டத்தில் பழைய ஆபத்துக்கள் விலகுவதற்குப் பதிலாய் பருத்து வளர்ந்துள்ளன என்பது கொழும்பில் நேற்று வெடி கொளுத்திக் கூறப்பட்டது.
அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தோடு மூவாயிரம் உயிர்கள் சரிந்தபோது இஸ்லாமிய உலகில் பட்டாசு கொளுத்தப்பட்டது. ஆனால், போட்டியே வாழ்வான உலகமைப்பின் தலைமைப் பதவியை வென்று தக்கவைத்துள்ள அமெரிக்கா தன்னை நோக்கிக் கொழுத்தப்பட்ட பட்டாசுகளை அதிகநேரம் அதிரவிடவில்லை. அமெரிக்காவின் கொள்கைகளோடு முரண்படினும், இவ்வுலகியலின் போட்டிகளோடு பொருதி வெல்ல விழையும் நாமும் எம்மை நோக்கிக் கொழுத்தப்படுகின்ற சிங்களப் பட்டாசுகளிற்கு அதிக அவகாசம் கொடுக்காதிருப்பது அவசியம். அதற்கு நம் அனைவரதும் பங்களிப்பும் அவசியம். அதற்கும் மேலால் நமக்கு நாம் மட்டுமே என்ற தெளிவு மிக மிக அவசியம்.
யாழ் இணையம்










Post a Comment