ஈழத்துத் தமிழ் பெண்ணுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை:ஸ்லம்டாக் மில்லியனர்
சமீபத்தில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்றுள்ள திரைப்படமான "ஸ்லம்டாக் மில்லியனர்" (Slumdog Millionaire) திரைப்படத்தில் வரும் 'ஓ சயா' என்ற பாடலை எழுதி பாடியவர் மாயா.
இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழனின் வேதனை உணர்த்த தக்க சமயத்தில் மாயா என்ற தமிழ் பாடகிக்கு ஆஸ்கார் மற்றும் மிகவும் உயர்ந்த பாடகர் விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்து தமிழ்பெண் ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம் இவர் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர், ராப் பாடகர். தமிழ் ஈழத்தில் 17 ஜுலை 1977-ல் கலா மற்றும் அருட்பிரகாசம் தம்பதியினருக்கு பிறந்தவர். இவரது தந்தை அருட்பிரகாசம் தீவிர ஈழ ஆதரவாளர் மற்றும் அப்போதையை தமிழ் ஈழ மீட்பு போர்ப்படை (தற்போது த.ஈ.வி.புலிகள்) பணியாற்றியவர். முதலாம் உள்நாட்டு போரில் சிங்களப்படைகள் தமிழர்களை குடும்பம் குடும்பமான கொலை செய்தபோது தனது தாயுடன உயிர் பிழைத்து சென்னைக்கு வந்தார். சென்னையில் தங்கிருந்த இவர் சில வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையைக் காண யாழ்ப்பாணம் சென்றார்.
அங்கு தனது வீடு மற்றும் படித்த பள்ளிக்கூடம் முழுவதும் இலங்கை இராணுவத்தினரால் சூரையாடப்பட்டுகொண்டிருந்தது. அவரது தந்தையும் இலங்கை இராணுவத்துடன் போராடிக்கொண்டிருந்த காரணத்தால் இராணுவம் இவரையும் இவரது தாய் மற்றும் இவரது இரண்டு சகோதரர்களையும் தேடிக்கொண்டிருந்தது. உயிருக்கு பயந்து மீண்டும் தமிழகம் வந்த இவர்கள் உறவினர் இருவரின் ஆதரவால் லண்டன் நோக்கி பயணம் ஆனார்கள்.
மாயாவிற்கு வயது 11 லண்டனில் அகதியாக தனது வாழ்க்கையை துவங்கியவர். லண்டனில் உள்ள சென்ட்ரல் செயிண்ட் மார்சியல் ஆர்ட் அகேடமியில் தனது கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப்பாடல்கள் இயற்றுவதும் தானாகவே ஆல்பங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பாடல்கள் இங்கிலாந்து மட்டுமின்றி அமெரிக்க நாடுகளிலும் பிரபலமானது. தனி இசை ஆல்பம் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமானது. 2005-ஆம் ஆண்டில் ‘ஆல்பம் ஆப் த இயர்’ என்ற விருதை பெற்றுத்தந்தது. இந்த வருடம் பேப்பர் ப்ளேன்ஸ் (Paper Planes-2008), சகா லைக் அஸ் என்ற இரண்டு ஆல்பங்களுக்கு மிக உயரிய விருதான கிராமிவிருது இவருக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.
மேலும் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தில் வரும் 'ஓ சயா' "O' Saya"(இந்த பாடலை எழுதி பாடியவர் இந்த ஈழத்தமிழ் பெண்) என்ற பாடலுக்காக இவருக்கு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. இவரை அறிமுகம் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்தது இல்லை. ஆனால் ரஹ்மானுடைய ஸ்டுடியோவில் பல முறை மாயா தனது ஆல்பத்திற்கான பாடல் பதிவுகளைச் செய்திருக்கிறார். இவ்வாறு அறிமுகம் ஆன மாயா ஸ்லம்டாக் மில்லியனர் மூலமாக பாலிவுட் படத்திற்கு அறிமுகம் ஆனவர். இதில் ரஹ்மான், மாயா இருவருமே தமிழர்கள் என்பது சிறப்பம்சம்.
இவரிடம் சமீபத்தில் இலங்கையில் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பற்றி பேட்டி கண்ட போது "இலங்கையில் தற்போது நடைபெறுவது போராளிகளை அழிப்பததாக கூறிக்கொண்டு அங்கிருக்கும் தமிழர்களை குடும்பம் குடும்பமாக அழிக்கும் செயலில்தான் இறங்கி வருகிறது இலங்கை ராணுவம், இலங்கையில் இருந்து முற்றிலுமாக தமிழர்களை அழிக்கும் இன அழிப்பிற்காகத்தான் தற்போது அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு பிற நாடுகளும் உதவி வருகிறது.
இலங்கை அரசு விடுதலைப்புலிகள் என்றாலே இலங்கை தமிழர்கள் என்ற மாயை உலகெங்கும் ஆக்கிவிட்டது. அதனால் பல நாடுகள் உண்மை தெரியாமல் இருக்கிறது. இலங்கை தமிழர்களை அழித்துவிட்டு சிங்களர்வர்களை குடியமர்த்தும் பணியில் மிகவும் நரித்தனமாக நடந்து உலக நாடுகளை நம்பவைத்துள்ளது. இந்திய அரசும் சில காரணங்களால் இலங்கைக்கு தனது முழு ஆதரவை தந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள சில பிரிவு மக்களிடையே மூளைச்சலவை செய்து ஈழத்தில் நடக்கும் அனைத்து செயல்களுக்கு புலிகளே காரணம் என்பது போல் காண்பித்துவருகிறது. உண்மையில் இலங்கையில் நடப்பது பாரம்பரியமும் பூர்வ குடிகளான தமிழர்களை அழிக்கும் தீவிர நடவடிக்கையில் இறங்கி வருகிறதே அன்றி இலங்கையில் தமிழருக்கு என்று சுயாட்சி மற்றும் சலுகை போன்ற அறிவிப்பு எல்லாம் இலங்கை அரசு உலகை ஏமாற்ற போடும் வேசம்” என்று கூறினார்.
இந்த வருடம் தமிழர்களின் உரிமைக்குரலை உலகநாடுகளுக்கு கொண்டு செல்லும் இவரது இந்தப் பேட்டி பெரிய படிப்பினை. மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்த தலைமுறை தமிழர்களுக்கு இலங்கையில் நடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதாகவும் இவரது பேட்டி அமைந்துள்ளது.
இசையின் மூலம் தமிழர்களின் உணர்வுகளை வெளிக்கொண்டுவந்த ‘மாயா’ என்ற மாதங்கி அருள்பிரகாசத்திற்கு அதிகாலை வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
மாயா (MIA) பாடல் கிரம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது







