தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை: அவலநிலை குறித்து உலக சமூக ஒன்றிய மாநாட்டில் ஆராய்வு

| |

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் அங்கு மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தும் பிரேசிலின் பெலம் நகரில் தற்போது நடைபெற்று வரும் உலக சமூக ஒன்றியத்தின் எட்டாவது மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இந்த மாநாட்டில் உலகின் பல பாகங்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களுக்கும், உரிமை கோரி வரும் போராட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய அமைப்பினால் கொடுக்கப்படும் அங்கீகாரமும் பங்களிப்பும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதை நிவர்த்தி செய்யும் வகையில் 2001 ஆம் ஆண்டில் உலக சமூக ஒன்றிய மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது.

உலக சமூக ஒன்றியத்தின் எட்டாவது மாநாட்டில் 150-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





இந்த மாநாட்டில் குறிப்பாக உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்கள் மற்றும் உரிமைப் போராட்டங்கள் குறித்து பிரதிநிதிகள் விளக்கமளிப்பர். வட்டமேசை கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களும் இங்கு நடைபெறும்.

குறிப்பாக அரசுகள் அற்ற தேசிய இனங்களாகக் கணிக்கப்படும் 20-க்கும் அதிகமான தேசிய இனங்களின் பிரதிநிதிகள் அங்கு தமது விடயங்கள், விவகாரங்களுக்கான விளக்கக்கூட்டங்களை இந்த மாநாட்டில் நடத்தி வருகின்றனர்.

பலஸ்தீனியர், மேற்கு சாகரவி, குரூடிஸ்ரன், பாஸ்க், கத்தலோன் போன்ற தேசிய இனங்களின் பிரதிநிதிகளும் இங்கு கலந்துகொண்டு தத்தமது விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



குறிப்பாக இங்கு நடைபெறும் சுயநிர்ணய கோட்பாடு பற்றிய பல கூட்டங்கள், வட்டமேசை கலந்துரையாடல்களில் தமிழ்ப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பும் தற்போது அங்கு நிலவும் அவல நிலை பற்றியும் எடுத்துக் கூறி வருகின்றனர்.

இந்த மாநாட்டில் தமிழர் மனித உரிமை மையத்தினரினால் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்கள், சமய, கலாச்சார, மனித உரிமை, கல்வி, அரசியல், விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக தமிழர் மனித உரிமை மையத்தினரின் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளரான, அதன் பொதுச் செயலாளர் கிருபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தமிழர் மனித உரிமை மையத்தினரினால் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கை ஒன்றும் இந்த மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.



Posted by எல்லாளன் on 9:37 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response