மும்பையில் 25 கிலோமீற்றர் நீளத்திற்கு மனித சங்கிலி – கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்பு
ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்கள் மீதான தாக்குதலை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும், இந்தியா துரோகத்தனத்தை நிறுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இதே முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் அரசியல், மதம், சாதி பேதங்கள் இன்றி 25,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழின முன்னேற்றம், விடுதலை, சுய மரியாதை போன்ற அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு கடந்த 3 மாதங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மும்பையின் “வழித்தெழு இளைஞர் இயக்கம்” இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த மனித சங்கிலியில் கட்சிகளின் பதாகைகள், துண்டுகள் மற்றும் அடையாளங்கள் சகிதம் கலந்துகொள்ள முற்பட்ட சிலர் மக்களால் அகற்றப்பட்டு அங்கிருந்து நீக்கப்பட்டதுடன், சுயநல இனத்துரோகிகள் என மக்களால் குற்றம் சுமத்தப்பட்டனர்.
மூன்று மாதங்களின் முன்னர் இனமத பேதமின்றி ஆரம்பிக்கப்பட்ட தமது “விழித்தெழு இளைஞர் இயக்கத்தால்” கட்சி பேதமின்றி மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டுவர முடியும் என்றால், அரசியல் கட்சிகள் இதனை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என, “வழித்தெழு இளைஞர் இயக்கம்” அழைப்பு விடுத்துள்ளது.












