தமிழ்நாட்டில் தொடரும் கைதுகள் இன்று காலை பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி கைது
பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணியை திண்டுக்கல் காவல்துறையினர் இன்று காலை 7.30 மணிக்கு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அவரது பொன்னகர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
பெப்ரவரி 26ம் திகதி திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால் விசாரணை செய்வதற்காக அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல் காவல்துறையினர் கொளத்தூர் மணி வீட்டுக்கு வந்தனர்.
அப்போது அவர், நான் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கு. காலை 7மணிக்கு வாருங்கள் என்று சொல்லியனுப்பினார். கொளத்தூர் மணியை விசாரனைக்கு அழைத்து செல்லவிருக்கும் விடயம் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவர அதிகாலை முதலே அவர் வீட்டுமுன் குவிந்துவிட்டனர்.
அவர் வீட்டுமுன்பு பாதுகாப்பிற்காக அதிகளவு காவலர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை 7.30 மணிக்கு அவர் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தனது தோட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்ததற்காகவும் , கர்நாடகவாழ் தமிழர்களுக்காக போராடியதற்காகவும் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர். சில நாட்களுக்கு முன்புதான் ஈரோடு நிகழ்வில் பேசியதற்காக ஒரு மாதம் சிறை சென்று வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.











