மன்மோகன் சிங் கொழும்புக்கு நாயரை அனுப்பியதன் நோக்கம், தமிழக வாக்கு வங்கியில் கண்வைத்தே?
![]()
தமிழ்நாட்டின் வாக்கு வங்கியில் கண்வைத்தே இலங்கைக்கு கடந்த வாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விசேட தூதுவராக தனது தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ.நாயரை அனுப்பியதாக இணையத்தளம் ஒன்று சுட்டிகாட்டியுள்ளது.
அத்துடன் நம்பகரமான அதிகாரப் பகிர்வை துரிதமாக முன்வைக்க வேண்டுமென்ற செய்தியையும் கொழும்புக்கு விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் மார்ச் 25, 26 இல் தங்கியிருந்த நாயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களையும் சந்தித்திருந்தார். அனுராதபுரத்துக்கு சென்று பௌத்த கோவில்களையும் தரிசித்தார்.
நாயரின் இந்த விஜயத்தை கொழும்பும் டில்லியும் அதிகம் பிரபல்யப்படுத்தாமல் வைத்திருந்தன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின் பேரில் நாயரின் விஜயம் இடம்பெற்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இருநாடுகளுக்கும் இடையேயான பொது நிர்வாகம் தொடர்பான முன்னேற்றங்களை ஆய்வு செய்வதே இந்த வருகையின் நோக்கம் என்று சில தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் புதுடில்லியில் நிருபர்களுடனான சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், நாயரின் விஜயத்தை உறுதிப் படுத்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
"விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தென்படுவதாகவும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடமாகாணத்திற்கு நம்பகரமான அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கேட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையின்போது, சகல சிறுபான்மை சமூகங்களினதும் குறிப்பாக தமிழ் சமூகத்தினது தேவைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை பார்ப்பதற்குரிய படிமுறைகளை எடுக்கவேண்டிய தேவை குறித்து வலியுறுத்தியதாக மேனன் மேலும் கூறியுள்ளார்.
இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வாக அமையும் என்று இந்தியா நம்புவதாக மேனன் கூறியுள்ளார்.
இதேவேளை இந்திய விசேட தூவர் நாயர் அவர்களின் வருகையை இலங்கை அரசாங்கம் அம்பலப்படுத்தாத போதிலும், நாயர் கொழும்பில் தங்கியிருந்த காலப்பகுதியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







