இலங்கைக்கு நாடு கடத்தாமல் மனிதாபிமானம் காட்டுங்கள்: பிரிட்டிஷ் உள்துறை அமைச்சிடம் வேண்டுகோள்
![]()
இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் மனிதாபிமானம் காட்டுமாறு பிரிட்டிஷ் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியை ஒருவர் தனது இரு மாணவிகளுக்காக அந்நாட்டு உள்துறை அமைச்சு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இலங்கைக்கு தாங்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டால் தாங்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பீதியை பிரிட்டனிலுள்ள இலங்கையைச் சேர்ந்த ஜோசப் குடும்பம் பாடசாலை தலைமை ஆசிரியையான ஜோ ஹக்ஸிடம் கூறியுள்ளனர்.
ஜீவிதா, நீரஜா ஆகிய இருவரும் ஆங்கிலேய தியாகிகள் பாடசாலையில் 2008 அக்டோபரில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் முன்மாதிரியான மாணவிகள். அசாதாரணமான முறையில் கடினமாகப் படிப்பார்கள். எப்போதும் சீராக உடையணிவார்கள். கற்பதில் மிக ஆர்வம் உடையவர்கள். சகபாடிகளிடம் நட்புறவைப்பேணி வருகின்றனர். ஆசிரியைகள் மத்தியில் அவர்கள் செல்வாக்குப் பெற்றவர்கள். அவர்களுக்கு கல்வித்துறையில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்று தலைமையாசிரியை கூறியுள்ளார்.
அங்கு கற்கும் மாணவிகளுக்கு பாடசாலை சீருடையும் கற்றல் உபகரணங்களையும் வழங்குவதுடன் ஆங்கிலம் கற்க அனுசரணையும் வழங்கி வருகின்ற உள்துறை அமைச்சு இந்த விடயத்தில் சட்டரீதியான பார்வையைச் செலுத்துகிறது. தந்தை கடத்தப்பட்டு வெள்ளைவானில் கொண்டு செல்லப்பட்டார் என நான் உதாரணமாக கூறுகிறேன் என்று ஹக்ஸ் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சு இதற்கான ஆதாரம் எங்கே என்று பின்பு கேட்கும். குறுகியகால இடைவெளியில் குடும்பம் ஓடி வந்துவிட்டது. அதனால் ஆதாரத்தைப்பெற முடியவில்லை. அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சு கூறுகிறது. அங்கு தினமும் என்ற அடிப்படையில் மக்கள் கொல்லப்படடுகின்றனர் என்பது எமக்குத் தெரியும். இந்தச் சிறுமிகளும் தாயாரும் தாங்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டால் கொல்லப்படுவார்கள். என்று அச்சப்படுகின்றனர்.
இந்தப் பெண்களின் நிலைமை, அவர்களின் இங்குள்ள நிலைமை என்பன குறித்து "மெயில்" (பத்திரிகை) வாசகர்கள் பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்கிறோம். அவர்களை இங்கு வைத்திருக்க வேண்டியதற்கான சகலரினதும் ஆதரவு அவர்களுக்குத் தேவை என்றும் தலைமை ஆசிரியை "மெயில்" பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.







