போர் நிறுத்தப்படும் வரை நிறுத்தமற்ற போராட்டம்: நியூயோர்க் ஐ.நா. சபை முன்றலில் தமிழர்களால் முன்னெடுப்பு

| |

சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உடனடிப் போர் நிறுத்தத்ததை ஏற்படுத்தக்கோரி சுழற்சி முறையில் தொடர் நினைவூட்டல் போராட்டம் ஐந்தாவது நாளாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி சூசன் றைசின் ஐ.நா. செயலகத்தின் முன்பாக - தொடர்ந்து இரவு பகலாக - இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

நியூயோர்க் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் இப்போது - அயல் மாநிலங்களிலும் கனடாவிலும் இருந்தும் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.



தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்ட நிலையில் சிறிலங்கா அரசும் - சொல்லிலும் செயலிலும் - போரை நிறுத்தும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என இந்த நினைவூட்டல் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"150,000 மக்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்படும் அபாயத்தில் இருக்கின்றனர்"

"போரின் ஆயுதமாக சிறிலங்கா அரசு பட்டினியைப் பாவிக்கின்றது"

"சுதந்திர ஊடகங்கள் வெளியேற்றப்பட்டு, இனப்படுகொலை இரகசியமாக செய்யப்படுகிறது"

"'பாதுகாப்பு வலயம்' 'கொலைக் களமாக' ஆக்கப்பட்டுவிட்டது"

"தமிழீழ விடுதலைப் புலிகள் எமது சுதந்திரப் போராளிகள்"

போன்ற விடயங்கள் இந்த போராட்டத்தில் வைத்து வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களிலும் அங்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகளிலும் காணப்படுகின்றன.



மேலும் -

- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்

- இடம்பெயர்ந்தோர் வாழ்விடங்கள் ஐ.நா அமைப்புக்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்

- போர் பிரதேசத்திற்குள் செல்ல சுதந்திர ஊடகங்களுக்கும் மற்றும் தொண்டர் அமைப்புகளுக்கும் உடனடியான அனுமதி வழங்கப்பட வேண்டும்

என்பவை இந்த நினைவூட்டல் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் பரந்து வாழும் தமிழர்களை இந்தப் போராட்டத்தில் பெருமளவில் வந்து தொடர்ந்து கலந்துகொள்ளுமாறும் அவர்கள் கோருகின்றனர்.

இந்த நினைவூட்டல் போராட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் இந்த இணைப்பிலே உள்ளது -

http://www.tamilnaatham.com/advert/2009/apr/20090428/USA/




Posted by எல்லாளன் on 6:50 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response