மெல்பேர்னில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஊர்வலமும் சர்வமத பிரார்த்தனையும்.

| |

மரணப்பிடியில் சிக்கி தினமும் மாண்டு கொண்டிருக்கும் தமிழ் உறவுகளுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை ஒளிதீப ஒன்றுகூடலும் அதை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஊர்வலமும் பின்னர் சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது உறவுகளுக்கு விடிவு வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

இரவு 7 மணியளவில் அங்கு எழுச்சி உரைகள் இடம்பெற்றன. ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தர்மா, தமிழகத்தை சேர்ந்த ஈழத்தமிழ் உணர்வாளர் அசோகராஜன், வணக்கத்துக்குரிய உதயன், செல்வி நர்மதா, மற்றும் ஆஸ்திரேலிய இடதுசாரி கட்சியை சேர்ந்த ட்ரெண்ட் ஆகியோர் எழுச்சி உரைகளை நிகழ்த்தினர்.

இதேவேளை, வழமை போலவே மிகுந்த சனமாட்டம் மிக்க பிரதேசமாக காணப்பட்ட இன்றைய வெள்ளி இரவில் பல்லின மக்கள் பலரும் வந்து இந்த போராட்டம் பற்றி கேட்டறிந்தனர்.

தமது நாட்டு ஊடகங்களில் வெளிவராத தமிழ் மக்களின் இந்த படுகொலை செய்திகளை கேட்டு அதிர்ச்சியுற்றவர்களாக, தமது மின்னஞ்சல் முகவரிகளை தந்து, தாயக நிலைவரம் தொடர்பான செய்திகளை தமக்கு தொடர்ந்து தெரியப்படுத்துமாறு கோரிச்சென்றனர்.

இன்றைய கவனயீர்ப்பு பேரணியிலும் பெருந்தொகையான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. போராட்டத்தில் கலந்தகொண்டவர்கள் ஒரு கையில் மெழுகுவர்த்தியும் மறுகையில் பதாகைகளையும் ஏந்திநின்றனர்.

இரவு 7.30 மணியவில் அங்கிருந்து ஊர்வலாமாக புறப்பட்ட மக்கள் சுவான்ஸ்டன் வீதி வழியாக சென்று கொலின்ஸ் வீதியூடாக நகர்ந்து விக்டோரிய திறைசேரிப்பூங்காவுக்கு பின்னாலுள்ள சென். பீற்றர்ஸ் தேவாலயத்தை சென்றடைந்தனர்.

அங்கு சென்றடைந்த இந்த அமைதிவழி ஊர்வலம் பின்னர் தேவாலயத்தினுள் சென்று சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டது. கத்தோலிக்க திருச்சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரார்த்தனை நிகழ்வில் அனைத்து மத வழிபாடுகளும் இடம்பெற்றன.

மரணத்தின் பிடியில் சிக்கி மாண்டு கொண்டிருக்கும் தாயக உறவுகளுக்கு விரைவில் விடிவு பிறக்கவேண்டும் என்று இந்த பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிராத்தனையின் இறுதியில் ஆலய பேராயர் ஆசிச்செய்தி வழங்கையில் "துன்பப்படும் தமிழ்மக்களுக்கு நிரந்தரமான விடிவு ஒன்று கிடைக்கும்" என ஆசி தெரிவித்தார்.

இரவு 10.15 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

Posted by எல்லாளன் on 7:06 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response