பட்டினியுடன் ராணுவத்தின் வேலைகளைச் செய்ய பணிக்கப்படும் வன்னி மக்கள்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சமீபத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த மக்களுக்கு போதுமான உணவு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்டவில்லை. ஆனால் படையினருக்கு தேவையான வேலைகளை செய்யுமாறு அவர்கள் மிரட்டப்படுவதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதிகளுககான உணவு விநியோகத்தை திட்டமிட்டு மட்டுப்படுத்தியுள்ள ராணுவம், மக்களைப் பட்டினி போட்டு துன்புறுத்துவதோடு தமக்கான வேலைகளையும் மக்களே செய்யவேண்டும் என பலவந்தப்படுத்தி வருகின்றது. வன்னியில் மீள்குடியமர்த்தவென கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அங்குள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் ராணுவம், அவர்களின் நடமாட்டங்களை முற்றாக தடுத்துவைத்துக்கொண்டு, தாம் நினைத்தபோது இவ்வாறு மக்களைத் துன்புறுத்தி வருகின்றது.
அரச செயலக புள்ளி விவரங்களின்படி நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை 6,037 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பகுயிலும், நவம்பர் 17 ஆம் திகதி வரை 2,821 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம், அக்கராயன்குளம், முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர வலைப்பாடு மற்றும் கிராஞ்சி பகுதிகளிலும் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாக அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை, உலக உணவு திட்ட நிறுவனத்தினரால் அரசின் ஊடாக விநியோகிக்கப்பட்ட உலர் உணவு பொருட்கள் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன, ஆனால் அவை பற்றாக்குறையாக உள்ளதோடு, ஒரு வருடத்திற்கு முன்னர் பழுதாகிய உணவு பொருட்கள் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.







