போர்க் கதாநாயகர்கள் சிறையில், கே.பி மட்டும் சொகுசாக இருக்கிறார்: சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளராக இருந்த கே.பி ஐ அரசாங்கம் நம்புவதால் பெரும் ஆபத்து உள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கே.பி ஐக் கைது செய்து பல மாதங்களாகியுள்ள போதிலும் அவரை ஏன் இன்னமும் சிறையில் அடைக்கவில்லை எனக் கேட்ட கேள்விக்கு, அரசாங்கம் முன்னாள் புலித் தலைவருடன் பணியாற்றுவதற்குக் காண்பிக்கும் ஆர்வமானது போரில் தங்களுடைய உயிரை இழந்த படையினரின் ஒழுக்கத்தைக் கெடுக்கின்றது.
அவரைச் சிறையில் போடாமல் இருப்பது அரசின் வெட்கக் கேடான செயல் என்றும் கூறினார். கே.பி இன் இருப்பில் ஏராளமான பணம் உள்ளது. அவரின் சட்ட விரோதச் செயல்களைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கும், அவரைச் சிறையில் அடைக்காமல் இருப்பதற்கும் இப்பணமே காரணமாக இருக்கக் கூடும்.
பல பிரிகேடியர்கள், ஜெனரல்கள் உட்பட ஏராளமான போர்க் கதாநாயகர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் நிலையில், பயங்கரவாதிகள் மட்டும் சொகுசாக இருக்கிறார்கள் என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
கே.பி நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு நபர் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் முடிந்து ஓராண்டுக்குப் பின்னர் கே.பி புலம்பெயர் தமிழர்களை அரசுடன் இணைத்துச் செயற்படுத்துவதில் அரசுக்கு உதவி வருகிறார்.
இச்செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களின் பெரும்பான்மையினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு வந்த புலம்பெயர் தமிழர்களுடன் கே.பி வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளமைக்கு, சரத் பொன்சேகா பாராளுமன்ற ஒன்றியத்தின் அமர்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லத் தடைவிதித்திருக்கும் அரசு, குற்றச்செயல்களைப் புரிந்ததற்காகத் தடுத்து வைத்திருந்த கே.பி ஐ மட்டும் வடக்குக்குச் செல்ல அனுமதித்தது என்று ஜே.வி.பி இனர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.







