டக்ளஸ் குழுவினருக்கு மகேஸ்வரனின் மனைவி கொடுத்த "நெத்தியடி" !

| |

சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றிய ஐ.தே.வின் யாழ். மாவட்ட உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரையை குறிக்கிட்டு குழைப்பிய டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியினருக்கு விஜயகலா மகேஸ்வரன் தக்க பதிலடி கொடுத்து தலைகுனிய வைத்துள்ளார் என்று நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

நேற்று பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விஜயகலா மகேஸ்வரினின் உரைக்கான நேரத்தில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதன்போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கடத்தல் மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்களுடன் அரசுடன் சேர்ந்தியங்கும் ஆயுதம் தாங்கிய கட்சி ஒன்றே தொடர்புபட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதன்போது,எழுந்து அவரது உரையை இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா, "யாழ்ப்பாணத்தில் செயற்படுவதாகக் கூறப்படுகின்ற அந்தக் கட்சி எது?" - என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதலளித்த விஜயகலா, "யாழ்ப்பாணத்தில் பல கட்சிகள் உள்ளன. நீர் எதற்கு பதகளித்து பதற்றப்படுகின்றீர்? ஏன் பயப்படுகின்றீர்" - என கிண்டலாக சிங்களத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் மீண்டும் டக்ளஸ் தேவானந்தா, "குறித்த கட்சி எது என்பதைத் தெளிவு படுத்தவேண்டும்" - எனக் கேட்டபொழுது விஜயகலா அவ்வாறே பதிலளித்துள்ளதுடன் தனது கணவர் மகேஸ்வரனை டக்ளஸ் தேவானந்தாவே கொலை செய்ததாகவும் இது தொடர்பில் தான் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடைமறித்த ஈ.பி.டி.பி.யின் சந்திரகுமார், "உமது கணவன் மண்ணெண்ணை வியாபாரிதானே என்றும் டக்ளஸ் தொடர்பில் கதைக்க முடியாது" - என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதலளித்த விஜயகலா "நீர் வெளிநாட்டில் இருந்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கின்றீர். உம்மையும் டக்ளஸ் தேவானந்தா கொலை செய்ய முயன்றார். நீர் வெளிநாடு செல்லாதிருந்திருந்தால் டக்ளஸ் உம்மையும் போட்டு தள்ளியிருப்பார். எனவே இப்போது இங்கு கதைப்பதற்கு எந்தத் தகுதியும் உமக்கு இல்லை" - என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரும் மெளனித்துப் போனதாக நாடாளுமன்றத் தரப்புக்கள் தெரிவித்தன.

Posted by எல்லாளன் on 8:01 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response