அசின் மீது நடவடிக்கை - ராதாரவி
தடையை மீறி கொழும்பில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள நடிகை அசின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.
இனப்படுகொலையை அரங்கேற்றிய சிறீலங்காவுக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக் கூடாது, படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது, படப்பிடிப்புகளுக்குப் போகக் கூடாது என்ற முடிவை நடிகர் சங்கம், திரைப்பட வர்த்தக சங்கம், ஊழியர் சங்கமான பெப்சி உள்ளிட்ட அனைத்து திரையுலக அமைப்புகளும் சேர்ந்த கூட்டமைப்பு எடுத்துள்ளது.
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தென்னிந்தியத் திரையுலகினர் குறிப்பாக நடிகர், நடிகைகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் நடிகை அசின் இந்த தடையை மீறி கொழும்பில் படப்பிடிப்புக்காகப் போயுள்ளார். மகிந்த அரசு வேண்டி விரும்பி அழைப்பு விடுத்ததால் இந்தி நடிகர் சல்மான் கான் தனது ரெடி படத்தின் படப்பிடிப்பை கொழும்புக்கு மாற்றியுள்ளார்.
இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் அசின். தமிழ் திரையுலகம் மூலம் சினிமாவுக்கு வந்த அசின், தெலுங்கிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியில் மார்க்கெட்டை ஸ்திரமாக்கிக் கொள்ள ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார்.
தமிழ்ப் படத்தில் அசின் நடித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதை ராதாரவியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தடையை மீறி அசின் போயிருக்கிறார். அது கடுமையாக கண்டித்தக்கது. எனவே அதுகுறித்து உரிய முறையில் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் என்றார்.







