ஈழமுரசும் புலத்திலும் ஒற்றை நாணயத்தின் இரு பக்கங்களே

கனடாவில் கடந்த சனிக்கிழமை முதல் வெளிவரும் புலத்தில் இதழ் தொடர்பாக ஊடகஇல்லம் வெளியிட்ட அறிக்கை
அன்பார்ந்த கனடிய தமிழீழ உறவுகளே,
புலத்தில் பத்திரிகை ஊடாக உங்கள் வாசல்தேடி வந்து உறவாடிக் கொள்வதில் பாரிஸ் ஊடக
இல்லத்தின் தாய்ப்பதிப்பாக விளங்கும் ஈழமுரசு இதழின் (ஐரோப்பா) ஆசிரியர் குழுவினராகிய நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய தேசங்கள்
தோறும் வெளிவரும் ஈழமுரசு இதழின் கனடிய பதிப்பு, முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிகழ்வுகளின் விளைவாக கனடாவில் வெளிவருவதில் அண்மைய
மாதங்களில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன.
இதேநேரத்தில் தாயகச் செய்திகள், அரசியல் ஆய்வுகள், களப் பதிவுகள் என இதுவரை காலமும் பல்வேறு தளங்களில் உங்களின் கைகளை வந்தடைந்த ஈழமுரசு இதழின் வருகை திடீரென நின்று போனதையிட்டு கனடிய தமிழீழ உறவுகளாகிய உங்களில் பலர் வெளிப்படுத்திய ஆழ்மனப் பதிவுகளையும், ஆதங்கங்களையும் நாம் கவனத்தில் எடுக்கத் தவறவில்லை.
இந்நிலையில் பல்வேறு நெருக்கடிகளையும், சவால்களையும், இடையூறுகளையும் வெற்றிகொண்டிருக்கும் நாம், புலத்தில் என்று புத்திதழ் வடிவம்பெற்று மீண்டும் ஈழமுரசு (ஐரோப்பா) இதழின் கனடிய பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுவதில்
பேருவகையடைகின்றோம்.
பாரிஸ் ஊடக இல்லம் என்ற ஒற்றை நாணயத்தின் இரு பக்கங்களாகவே ஈழமுரசு (ஐரோப்பா)
இதழும், புலத்தில் இதழும் திகழ்கின்றன. இந்த வகையில் இது உங்கள் இதழ். உங்களுக்கான
இதழ். உங்கள் எண்ணங்களின் களமும் கூட!
இதுவரை காலமும் எமது கனடிய பதிப்பிற்கு நல்லாதரவும், நல்லாசியும் வழங்கி, ஆல்போல்
கிளைபரப்பி அறுகுபோல் கனடிய தமிழ் வாசகர் வட்டத்தில் நாம் வேரூன்றுவதற்குக் காலாக
அமைந்த எமது நேசத்திற்குரிய வணிகப் பெருந்தகைகளுக்கும், எமது பாசத்திற்குரிய
வாசர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
கடந்த காலங்களைப் போன்று இடையூறுகள் இன்றி எமது ஊடகப் பணி தொடர்வதற்கு தொடர்ந்தும்
உங்கள் நல்லாதரவை நல்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
ஈழமுரசு (ஐரோப்பா) – புலத்தில் ஆசிரியர் குழுமம்









